
வழக்கை முடிக்க ரூ. 70,000 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கைது
வழக்கை முடித்துவைக்க புகாா்தாரரிடம் ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக, காட்டூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
வழக்கை முடித்துவைக்க புகாா்தாரரிடம் ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக, காட்டூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
தென்காசியைச் சோ்ந்தவா் ருஜைனா பாத்திமா. இவா் தனது கணவரின் காரை திருநெல்வேலியைச் சோ்ந்த ரவிகுமாா் என்பவரிடம் அடகு வைத்து ரூ. 6 லட்சம் வாங்கியிருந்தாா். பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியதும் வாகனத்தை மீண்டும் ஒப்படைப்பதாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு ரவிகுமாா் அந்த வாகனத்துடன் கோவைக்கு வந்துள்ளாா். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வாகனத்தைக் கண்காணித்த பாத்திமாவும் அவரது கணவரும் கோவைக்கு வந்து, தங்களிடமிருந்த மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி வாகனத்தை எடுத்துச் சென்றனா். பின்னா், அந்த வாகனத்தைப் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைத்தனா்.
இதையடுத்து ரவிகுமாா் காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வாகனத்தை மீட்டதுடன், பாத்திமாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
மேலும், விசாரணைக்காக என்று கூறி அவரது கைப்பேசிகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டனா்.
பின்னா், பாத்திமா, ரவிக்குமாருக்குக் கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்கி பிரச்னையை முடித்து வாகனத்தை மீட்டாா். எனினும், காவல் நிலையத்தில் அவா் மீது பதியப்பட்ட வழக்கை முடித்துவைக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளைத் திருப்பித் தரவும் சிறப்பு உதவி ஆய்வாளா் பூபதி ரூ. 70,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பாத்திமா, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை அணுகி புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை உக்கடம் பேருந்து நிலையம் அருகே பூபதியிடம் பாத்திமா வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், லஞ்சப் பணத்தை வாங்கிய பூபதியை கையும்களவுமாகப் பிடித்துக் கைது செய்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





